பதிவுகள்

  • www.wasimakrampage.blogspot.com - padihal@yahoo.com - padihal@gmail.com

படிகள் 31 - ஆளுமை

அகவை 75ல் தேசத்தின் கண் மானா மகீன் - கலைச் செல்வன்


வரலாறு என்பது விண்மீன்களுக்கான வெளிச்சம் அல்ல.
விடியல்களுக்கான வெளிச்சப்பிழம்புகள், இது வெறும் விளம்பரம் அல்ல. துலாம்பரம் - துலாபாரம் ஆற்றலின் அறுவடை ஆளுமைக்கான பொற்குடை! சுவடுகள் பதித்த சூரியனின் சரித்திரம். கண்டெடுத்த புதையலின் சூத்திரம். இங்கே உங்கள் விழிமேய்ச்சலுக்காக என் நினைவுக் கேமிராவினால் படம் பிடித்திருப்பது வரலாற்றில் வாழும் என் காதலுக்குரிய கதாநாயகனைத்தான்.

அந்த நாயகன் யார் தெரியுமா?
சமத்காரங்களினால் சாதனைப் படைக்கும் தமிழ்மணி மானா மக்கீன் தான். இவருக்கு கிடைத்த அரச சாஹித்திய உயர்விருது 'தேசத்தின் கண்;' இதனால் பலருக்கு தேகத்தில் புண். இந்த அமானுஷ்ய புத்திரனால் இலக்கியபூமிக்கும் புரவலர்கள் பலர் அறிமுகம். அதனால் பழைய புதிய படைப்பாளிகளுக்கும் ஏறுமுகம். எனக்கும் கலைத்துறைக்கும் உள்ள தொடர்பும், எனக்கும் 'எம்திரி'க்கும் உள்ள உறவும் அரைநூற்றாண்டுக்கும் மேல், அது ஆலம்விழுதுகள் போல் அறுபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் கறுப்புக்கண்ணாடிக் காரரின் 'கல்கண்டு' இவர் கண்களைத் தழுவாதிருந்தால்...

அப்பொழுது பட்டித் தொட்டியங்கும் பட்டொளி வீசிய 'ரெடிபியூசன்' என்ற வானொலிப் பெட்டியில் ஒலிபரப்பான 'சிறுவர் மலர்' இந்த இளவயசுக்காரரின் இதயத்தில் இடம் பிடிக்காதிருந்தால்... எம்.எம்.மக்கீன் என்ற மானா மக்கீனை கலை யுலகம் காணாது போயிருக்கும். இலக்கியத்துறையும் இதயமற்ற இயந்திரமாயிருக்கும். ஊடகங்களுக் குள்ளும் ஊட்டச்சத்து குறைந்து போயிருக்கும் அன்றைய பதினொரு வயதுக்கார சிறுவன் தான், இன்று ஆற்ற சபையில் நூற்றொருவராக அகவை எழுபத்தைந்தைக் கொண்ட இளைஞனாகத் திகழும் எங்கள் தமிழ்மணி. ஆற்றல் வயலின் அற்புத விளைச்சலான நெல்மணி.

அதனாலன்றோ...
திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில், பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் தமிழகப் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களால் வழங்கப்பட்ட 'ஆய்வுத் தமிழ் ஆற்றுநர்' எனும் கௌரவம். ஒரு காலத்தில், நான் ஒரு இலக்கியக்காரனாக வரவேண்டும் என்பது மானாவின் அவா. மானா ஒரு கலைஞனாக திகழவேண்டும் என்பது என்னுடைய ஆசை. காலம் வேறுவிதமாக தீர்மானித்தது. பொன் விழாவையும் கடந்த இலக்கிய வாதியாக அவர் கலைஞனாக நான். என் பிள்ளைத் தமிழக்கு முதல் தொட்டிலைக்கட்டியவராக மானா, அவரது நாடக கேள்விகளுக்கு கரம் கொடுத்த கொடிமரமாக நான், இதுவே எங்களுக்குள் இருக்கும் ஆழம் காண முடியாததோர் ஆத்மதிருப்தி. இன்னொரு வகையில் பதியம் போட்டால் இது தான் எங்கள் இருவரினதும் ஆத்மபலம். இருக்க முடியும்?

அத்தோடு விட்டாரா இந்த அஷகாய சூரர் ?
சிங்கள நாடகத்துறையின் வளர்ச் சிக்குக் காரணமான முன்னோடி களில் ஒருவரான தயானந்த குணரத்ன இயக்கி அரச நாடக விழாவில் விருதுகள் பெற்ற 'இபிகட்ட' (ஆமை ஓடு) எனும் பிரபலமான நாடகத்தை 'கிளாரிகல் கிளாஸ்த்ரி' எனும் பெயரில் தமிழக்குத் தந்தார் 'எம்த்ரி' வெள்ளவத்தையில் அந்நாளில் இருந்த விமலா உதயனன் புரொடக் சன்ஸ் என்ற நாடக அமைப்பினரே இந்நாடகத்தை தயாரித்து இருந்தார் கள். தமிழ் - சிங்கள  முஸ்லிம் கலையுணர்வுக்கும், புரிந்துணர் வுக்கும் நாடகத்தின் மூலம் பாலம் அமைத்த இவரை பிறைநிலாவாகப் பார்க்கவில்லை. இவரை ஒரு பூரணச் சந்திரனாகவே புரிந்து கொள்கிறேன்.

இதன் பின்னும் தேசிய தமிழ் நாடக விழாவில், காலஞ்சென்ற நாடக ஆசிரியர் எம்.எச்.பௌசுல் அமீரின் 'தேட்டத்துராணி' இவரது இயக்கத்தில் அரங்கேறியதோடு, சிங்கள மேடையில் 'பல்கீஸ் நோனா' வாகவும் வரச்செய்தார். கிங்ஸ்லி எஸ். செல்லையாவின் ஆனந்தா புரொடக்ஷன்ஸ் நாடு பூராகவும் அரங்கேற்றிய தாலிக் கொடி நாடகத்தின் இயக்குனரும் இவரேயாவார்.

இப்படி ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் சிங்களத்திற்கும், சிங்களத்தில் இருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து சிங்களத்திற்கும் நாடகங்களை கொண்டு சென்றதன் மூலம் அர்த்தமுள்ள நாடக அரங் கை அகலப்படுத்தி இருக்கிறார். மூலையிலே முடங்கிக் கிடந்த கலைஞர்களுக்கு மூளைச் சலவை  செய்திருக்கிறார். தினகரன் தமிழ் நாடக விழா  1969இல் ஆறு விருதுகளை வென்ற எனது 'மனித தர்மம்' நாடகத்தில் ஒளி அமைப் பாளராகவும், சிகரம் தொட்ட என் நாடக முயற்சிகளுக்கு வழிசமைத்த வராகவும் எனக்குத் துணைநின்ற மானாவை எப் போதும் நான் நினைப்பதுண்டு. வந்த வழி மறந்தவர்களுக்கு வரலாற்றில் ஏது இடம் ?

கலைத்துறையில் மானாவின் பயணம் 15 ஆண்டுகள்தான். ஆனால் அவை பயனுள்ள ஆண்டுகள். குறைவான காலங்களில் நிறைவான சாதனைகள் அவர் உடையது. 'முது கலைஞர்' விருதிற்கு அது மட்டுமே போது மானது (முகமும் முகவரியும் இல்லாமல் முது கலைஞர்களாக தங்களை வரித்துக் கொண்டுள்ள வர்கள் முழுமனதோடு என்னை மன்னிப்பார்களாக )

அப்பொழுதெல்லாம் அவர் 'மானாவாக' பரிணமிக்க வில்லை. அனைத்திலும் எம்.எம்.மக்கீன் என்றுதான் பரிமாணமளித்தார் என் பதையும் நாம் மறந்து விட முடியாது. கலைத்துறையைவிட்டு இலக்கியத் துறையில் அவர் பயணித்ததால் தான் கடல் கடந்த நாடுகளில் எல்லாம் அவர் புகழ் துவங்கியது. புலமைத் துலங்கியது. அவரது வசிய வார்த் தைகள் பூக்களைக் கூட பூப்படையச் செய்யும்.

மானாவின் பல பரிமாணங்களை காகிதத் தட்டுப்பாடு கருதி இடை நிறுத்தம் செய்தாலும் இரண்டு விஷயங்களை சொல்லித்தான் ஆக வேண்டும். ஓன்று மேடை பங்களிப்புகளுக்கு மத்தியில் 'நிலா' என்ற சிற்றிதழை ஓராண்டு காலம் மாதம் இரு முறையாக நடத்தியது. அந்த அதிசயம் இன்றும் என்னை வியக்க வைக்கிறது.
இருண்டாவது... பத்தி எழுத்துக் களுடன் பலதரப்பட்ட பழரசத் தகவல்களுடன் ஒரு முழுப்பக்க மாகத் தொடர்ந்து நான்காண்டு களாக 'லைட்ரீடிங்' தினகரனில் பிரசுமானது. இந்த விசித்திரம் இப்போது வியர்க்கவைக்கிறது.  

நான் 'நிலா' வை ரசித்தவன். 'லைட்ரீடிங்'கை ருசித்தவன் இரண்டும் நின்று போனது காலத் தின் விதியா? கருத்துக் குருடர்களின் சதியா? இறைவனே அறிவான் எனினும் நதியை குளத்தினுள் மூழ்கடிக்க முடியவில்லை.

தமிழ்மணி ஒரு நதி. அதுவும் மகாநதி. எது நடந்தாலும் எப்படி நடந்தாலும் எட்டுத்திசையும் மானாவுக்கு வெற்றி திசைதான்.

நம் கைரேகைகளில் நமது சரித்திரம் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். அது உண்மையோ, பொய்யோ? ஆனால் இவரது விரல்களுக்கு ஒரு சரித்திரம் உண்டு. காரணம்? சூரியச் சொற்களால் சாறு பிழியும் வித்தையை இவர் விரல்கள் கற்றுக் கொண்டிருக்கின்றன. இதனை உறுதிப்படுத்துகிறது ஐந்தாண்டு களுக்கு முன்னர், எழுபதாம் அகவை விழாவின் போது இளை யான்குடியிலிருந்து பொற்கிழி கவிஞர் மு.சண்முகம் எழுதிய கந்தகவரிகள்.

ஈழம் தந்த வேழம்-அந்த
ஈர மண்ணின்
புன்னகைக்கும் சோளம்
எழுபது வயதான
நிலவு - இவர்
எல்லாத் தமிழருக்கும்
உறவு

இந்த உறவு நிலைக்க, இலக்கிய உறவு தழைக்க அகவை 75 இல் தடம் பதிக்கும் 'மானா' மக்கீன் அவர்கள், இன்ஷா அல்லாஹ் இன்னும் 75 ஆண்டுகள் வாழ்க வளமுடன் வல்ல நாயகன் அருளுடன். எனக்குள் எப்போ திருந்தோ ஓர் ஆசை, எனது உணர்வுத் தூரிகையால் மங்காத வர்ணங்களினால் ஓசையில்லா ஓசையின் ஓவியத்தை தீட்ட வேண்டும் என்பது. அந்த ஓவியத் தைத்தான் உங்கள் பார்வைக்குப் பதியம் போட்டு இருக்கிறேன் இன்று.

என்னை இயக்கும் இறைவனுக்கே எல்லாப் புகழும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக